Tuesday 13 March 2018

கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் இந்த நாட்டில் இருக்க கூடாது..

H.ராஜா  சில நாட்களுக்கு முன்பு பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்கிறார்.. ஏன்  என்றால் பெரியார் கடவுளே இல்லை என்று கூறியவர். இந்த ஆன்மீக பூமியில் கடவுளே இல்லை என்று கூறிய ஒருவரின் அடையாளம் கூட இருக்க கூடாது என்கிறார். 



முதல் கேள்வி இறை நம்பிக்கை என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதில் எப்படி இன்னொருவர் தலையிடலாம். ஒரு கடவுள் நம்பிக்கையோ பல கடவுள் நம்பிக்கையோ கடவுளே இல்லை என்பதோ ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை இன்னொருவர் நான் நம்புவதை நம்ப வேண்டும் என்று ஏன் கட்டாய படுத்த வேண்டும்????

இரண்டாவது பெரியார் ஏன்  கடவுள் இல்லை என்று கூறினார் என்ற வரலாறையே மறைக்க பார்க்கிறார்கள். கடவுள் நம்பிக்கை தவறானது என்பதற்காக அல்ல, கடவுள் பெயரை சொல்லி மனிதனை உயர்ந்தவன் தாழ்ந்தவன்  என்று சொன்ன அக்கிரமத்தை எதிர்த்தவர், ஒருவேளை இந்த வேற்றுமையை இறைவன் அனுமதிப்பாரானால் அவன் இறைவனே இல்லை என்கிறார். இதில் என்ன தவறு.

மூன்றாவது  பெரியார் இல்லை என்றால் இந்து மதம் இத்தனை நாள் இத்தனை பெருமையோடு வாழ்ந்திருக்குமா என்பதே சந்தேகம், காரணம் அனைத்து மக்களும் போய் கடவுளை வணங்க உரிமை பெற்று தந்தவரே இவர் தான். இவர் இல்லை என்றால் இன்று பெரியார் சிலையை உடைக்கிற இவர்கள்  கோயிலுக்குள்ளேயே போயிருக்க மாட்டார்கள், இன்னும் கொஞ்ச நாள் பெரியார் வாழாமல் போய்விட்டார் அவர் வாழ்ந்திருந்தால் இந்நேரம் இவர்கள் கருவறைக்கே போக உதவியிருப்பார். 

இந்த வரலாறு தெரியுமா??? இன்றைய தலை முறைக்கு??? இந்த வரலாறு தெரியாததின் விளைவு என்ன தெரியுமா?

உடைக்க சொன்னவர் மன்னிப்பு கேட்டு தன்னையும் தன்  பதவியையும் காத்துக் கொண்டார்  உடைத்தவர் தான் பாவம் கம்பி எண்ணுகிறார். 

எவ்வளவு பெரிய அறியாமை இந்த நாட்டுக்குள் வந்து விட்டது..

பி.ஜெ.பி ஆட்சிக்கு வரும்போது என்ன சொல்லி ஒட்டு கேட்டார்கள் ? 

ஊழலை ஒழிப்போம் - ஒழிந்து விட்டதா? இல்லை பெருகி விட்டதே 

கருப்பு பணத்தை மீட்போம்  - மீட்டு விட்டார்களா? இல்லை புது பணத்தையே பதுக்கி வைக்கும் தாராள தைரியசாலிகள் பெருகிவிட்டார்கள். 

அந்நிய முதலீடுகளை தடுப்போம் - அடடே எவ்வளவு பெரிய பொய்.. மேக் இன் இந்தியா என்பது என்ன???????? உள் நாட்டு முதலீடா?  அந்நிய முதலீடா? 

மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும்  - நடந்ததா? சாமியார்கள் தான் 1000 கோடிகளில் தழைக்கிறார்கள். கேட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள் அவர்கள் பொது மக்களா??? 

எந்த நல்ல திட்டத்தையும் செயல் படுத்த வக்கில்லாத அரசு இது ஆனால் அவர்களுக்கு வெற்றி மட்டும் வேண்டும்!!!! எப்படி வெற்றி வரும் மனிதனை மனிதனை பிரித்தால் போதும்  அதில் எவன் அதிகமாக இருக்கிறானோ அவனை ஆதரித்தால் போதும் ஒட்டு தானாய் வந்து விடும் அதைத்தான் பி.ஜெ.பி செய்து வருகிறது. இதை உலகில் எவரும் புரிந்துக் கொள்ளாமல் போகட்டும் தமிழனுக்கு புரியாதா... புரியும் அதனால் தான் இந்தியாவே                                  பி.ஜெ.பி ன்  வலையில் சிக்கினாலும் அது தமிழ் நாட்டில் நோட்டாவிடம் சிக்குகிறது. 

அதை மாற்றவே இப்போது மத மோதல்களை துவக்கியுள்ளது. கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் இந்த நாட்டை விட்டு வெளியே போய் விட்டால் நாடு வளர்ந்து விடுமா?? இல்லை நாடு சுடுகாடாகும், இசுலாமியர்களும் கிறிஸ்தவர்களும் இருக்கும் வரை இங்கே வர்ணாசிரமம்  தலை தூக்க முடியாது, ஒரு வேளை  கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் வெளியேறிவிட்டால் இந்த நாடு வர்ணாசிரமத்திலிருந்து தப்ப முடியாது. 



அது மட்டுமா? அவர்களது பள்ளிகள், கல்லூரிகள், சேவை மையங்கள் அனைத்தும் மூடப்படும், இந்தியா பாதுகாப்பற்ற நாடாக மனிதாபிமானமற்ற நாடாக  உருவாகும். 

கிறிஸ்தவ நாட்டிலும் இசுலாமிய நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான இந்துக்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்  ஆனால்  சொந்த  நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும்  பயந்து பயந்து வாழ்கிறார்கள் அதுவும் மத சார்பற்ற நாட்டில். ஏன் சில பேருடைய சொந்த சுய நலத்திற்காக. பதவி ஆசைக்காக, இதையும் மீறி கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் வாழக்க் கூடாது என்று தொடர்ந்து கூறினால், அவர்களது அறியாமையை கண்டு வேதனைதான் படமுடியும் வேறென்ன செய்ய முடியும்???? 

மனிதனை காக்க தான் எந்த கடவுளும், மனிதன் கடவுளை காக்க வேண்டியதில்லை. கடவுளை காக்க மனிதனை கொல்ல  மட்டுமல்ல அடிக்க மட்டுமல்ல, திட்ட மட்டுமல்ல, முறைக்க சொன்னால் கூட அது கடவுளே இல்லை. அது எந்த கடவுளானாலும். மனிதன் ஆன்மாவிலும் ஆராயத்திலும், மனிதாபிமானத்திலும், பாதுகாப்பிலும் வாழவே மதங்கள் தோன்றின ஆனால் அந்த மதங்களாலேயே இன்று மனிதன் அழிகின்றான் சில சுய நலமான  மிருகங்கள் சுகமாய் வாழ்கிறது. 

No comments:

Post a Comment